ஏதோ கோளாறாகிவிட்டது.
—————————————
ஏதோ கோளாறாகிவிட்டது என் வாழ்க்கையில்
முதுமை நெருங்கிக்கொண்டிருப்பது
காரணமாயிருக்கலாம்_ ஏற்கனவே நான்
விட்டு விட்டேன் நாட்களைக் கணக்கிடுவதை .

கவனமற்று வெறித்துப் பார்க்கிறேன் அடிக்கடி
இப்படியொரு குழப்ப மூட்டத்தில்
மூழ்கக் கூடாது…….. நான்……….
வாழவேண்டிய வகையில் வாழவில்லை.

உண்மையிலேயே வாழ்க்கை என்னைச்
சிதைத்து விட்டதாக எண்ணிக் குடிக்கிறேன்
தேவைக்கும் அதிகமாகவே குடிக்கிறேன்.
மனைவியைத் தவிர மற்ற பெண்களையும்
நேசிக்கிறேன் – இருந்தபோதிலும்
பரிதாபகரமாகவும்வரட்சியாகவும் தான் இருக்கிறது
என் வாழ்க்கை.

தொணியிழந்து விட்டது என் வாழ்க்கை
திரிகிறேன் எங்கேயும் எப்போதும்
காரண காரியமின்றி.
தணலற்றும் தளர்ந்தும் மதிப்பிழந்தும்
தேய்ந்து போயும் வாழ்கிறேன் ஒரு
காயலான் கடைச் சரக்கு போல.
ஏதோ கோளாறாகிவிட்டது என் வாழ்வில்.

பதுங்கிப் பதுங்கி நடக்கிறேன்
பழைய நண்பர்களின் பார்வையிலிருந்து
தப்பித்தவாறும்……
பொறுக்கிகளின் சகவாசத்திலும்.
ஆபத்தானதும் முட்டாள் தனமானதும்
அல்லவா இது ….?.

மூலம் :JUOZAS MACE VICIUS ( 1928 )
LITHUANIA.

தமிழாக்கம் :புதுவை ஞானம்.